Monday 31 October 2022

அப்புசாமியின் கலர் டி.வி.

பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமியின் கலர் டி.வி." முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் நிறைந்த ஒரு குறுநாவல். சென்னை தமிழ் பேசும் அப்புசாமி, சரளமாக ஆங்கிலம் பேசும் சீதாப்பாட்டி என அட்டகாசமான combo-வாக வரும் வயதான தம்பதியினரே இந்நாவலின் பிரதானமான கதாப்பாத்திரங்கள். இந்த முரண்பாடான இரு மனிதர்கள் அவர்களுக்குள் நடக்கும் வாக்குவதங்களிலும், சண்டைகளிலும் அவற்றிலிருந்து தப்பிக்க செய்யும் சமாளிப்புகளிலும் Tom and Jerry ஆக மிளிர்கின்றனர்.



சென்னை தமிழில் வரும் வசனங்களால் பல இடங்களில் சாதாரண ஜோக்குகள் கூட ரசிக்கும்படியாக அமைகின்றன. கதையின் போக்கில் வரும் சின்ன சின்ன suspense-களும், அவை உடைபடும் தருணங்களும் நம்மை கண்கள் நனைய சிரிக்க வைக்கின்றன.  

சில கதாப்பாத்திரங்களும், ஆங்காங்கே வரும் வசனங்களும் மட்டும் சமூகத்தின் பொதுமைப்படுத்தும் பார்வையை சுமந்து இக்கதைக்கு பின்னடைவாக இருக்கின்றன. 

மொத்தத்தில் கலகலப்பான light moments கொண்ட quick read “அப்புசாமியின் கலர் டி.வி.”.

Friday 28 October 2022

அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்"

வண்ணமையமான சினிமா உலகத்தின் வெளிப்புற தோற்றம் பார்வையாளனுக்கும் ரசிகனுக்கும் சினிமா துறையை பற்றி ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை இன்றும் ஏற்படுத்துகிறது. ஆனால், சினிமா துறையில் உழலும் ஊழியர்களின் இருளடைந்த வாழ்வும், அவர்களின் வலியும் தான் எதார்த்தமே. 


அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்" சினிமா துறையில் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. படத் தயாரிப்பாளர், உதவி இயக்குனர், புரடக்க்ஷன் மேனேஜர், கோஷ்டி நடன பெண்கள், ஓட்டுநர்கள், செட் அஸிஸ்டன்ட், மற்ற கடைநிலை ஊழியர்கள் என பல மனிதர்களின் வாழ்க்கையையும், பசியையும், அவமானங்களையும், பொருளாதார நிலையையும் அப்பட்டமாக பதிவு செய்யும் நாவல். 

கோடி கணக்கில் பணம் புரளும் தயாரிப்பாளரின் சகல வசதிகள் கொண்ட வீட்டை விவரிக்கும் அதே சமயம் அவரின் நிம்மதியற்ற வாழ்வும், சிதைவுற்ற குடும்ப நிலையும், நிச்சயமற்ற வியாபாரமும் தரும் மன அழுத்தத்தையும் உள்ளது உள்ளபடி சொல்கிறது இந்நாவல். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழக்கும் ஊழியர்கள்,  பின்னாளில் பிச்சை எடுக்கும் அந்த நிறுவனத்தின் சிறந்த புரடக்க்ஷன் மேனேஜர் போன்றோரின் நிற்கதியான நிலை நம் கண்முன் விரிகிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் காலி செய்யப்படும்போது, அவர்கள் கடைசியாக எடுத்த காட்சியின் கிளாப் போர்ட்டை ஒரு கடைநிலை ஊழியன் உரிமையாக பிடுங்கிக் கொள்ளும் காட்சி சிறிதும் melodramatic ஆக இல்லாமல் அசோகமித்ரனின் எழுத்தில் வெளிப்படுகிறது. இந்நாவல் 1960-களின் சினிமா பற்றிய விவரணையானாலும், தங்கள் பசியை தேநீரின் சூட்டிலும், அவமானங்களை சிகரெட்டின் கசப்பான புகையிலும் போக்கிக் கொள்ளும் உதவி இயக்குநர்களின் சித்தரிப்பு இன்றும் பொருந்தும்.  

சினிமாவில் உழலும் மனிதர்களின் தோல்வியை பற்றி பேசும் மிகச் சிறந்த நாவல் "கரைந்த நிழல்கள்". நாவலில் வரும் எந்த கதாப்பாத்திரத்திலும் தன் கருத்தை திணிக்க முற்படாமல், அவர்களின் செயல்களை மதிப்பிடாமல், அவர்களின் இயல்பை மட்டும் கூறி நமக்கு அவர்களின் உலகத்தை அறிமுகம் செய்கிறார் அசோகமித்ரன்.

Saturday 22 October 2022

கவிஞர் நா. முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்"

சிறு வயதில் பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்காக ஏங்கி, சண்டையிட்டு இடம்பிடித்த நாம் தான் இன்று பேருந்து கிளம்பி அடுத்த நிமிடமே தூங்கி விழுகிறோம் - அது எவ்வளவு சிறிய பயணாமாயினும். வேடிக்கை பார்ப்பது வெளி உலகத்தையும், இயற்கையையும் நமக்கு சிறு வயதில் அறிமுகம் செய்தது. இன்றோ வெளி உலகையும் இயற்கையையும் ரசிக்க நேரமில்லாமல், பல நேரங்களில் சோர்வின் சாயல் முகமுழுதும் படர,  இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். தனது வாழ்வையே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கவிஞர் இந்த தன் வரலாற்று நூலில் பல இடங்களில் நம்மையும் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறார்.


நா. முத்துக்குமார் தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கும் "வேடிக்கை பார்ப்பவன்" அவரது அனுபவங்களின் மூலம் வாழ்க்கை தத்துவங்களை நம்மிடையே கடத்துகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையோடு சேர்ந்து இயற்கையையும், நம்மோடு நடமாடும் மனிதர்களையும் ரசிக்கத் தூண்டுகிறது. எழுத்துப் புலமையைக் காட்டி வாசகனை மிரள வைக்காது, சாமானியனும் ரசிக்கும் எளிய மொழிநடையில் அமைகிறது இந்நூல். வாழ்விலும் சரி, எழுத்திலும் சரி எளிமை தான் நா.முத்துக்குமாருக்கு அடையாளம். அந்த எளிமையே அவரது திரையிசை பாடல்களிலும் பிரதிபலித்தது.

கவிஞரின் பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நடந்த சம்பவங்களில் பல வாசகனின் வாழ்விலும் நடந்திருக்கும் - அவை வாசகனுக்கு ஒரு nostalgic experience ஆக அமைகின்றன. 

"ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?", 

"இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக் கொள்வான்.", 

"தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள் பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தான்.",

"நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம்", 

"காதல் தோல்விதானோ யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு" 

போன்ற வரிகளில் வரும் பிரம்மிப்பூட்டும் கற்பனைகள் எளிய மொழி வடிவத்தில் இந்த புத்தகம் நெடுக பரவிக்கிடக்கின்றன. இவையே நா. முத்துக்குமாரின் "Trademark". 

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி தான் நா. முத்துக்குமார். 

Thursday 20 October 2022

திரு. தகழி சிவசங்கரம் எழுதிய "தோட்டியின் மகன்" - தமிழில் சுந்தர ராமசாமி

சமுதாயத்தில் நிலவும் சாதியக் கண்ணோட்டத்தையும், இழி தொழில் என தொழில்களை வகைப்படுத்தும் பார்வையையும் ஒரு நகர சுத்தித் தொழிலாளியின் வாழ்க்கையின் மூலம் பிரதிபலிக்கிறது திரு. தகழி சிவசங்கரம் எழுதிய "தோட்டியின் மகன்".




"தோட்டி மவன் தோட்டியா தான் ஆவனுமா?" என்ற கேள்வி இந்த நாவல் முழுக்க ஒலிக்கிறது. அது பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம முறைக்கு எதிரான குரல். தனது அடுத்தத் தலைமுறையை தோட்டி தொழிலில் ஈடுபடுத்தாமல் படிக்க வைக்க முற்படும் சுடலைமுத்துவை பற்றிய கதை இது. 

புரட்சிகர சிந்தனையாயினும், சுடலைமுத்துவை புரட்சிகர நாயகனாக சித்தரிக்கவில்லை - தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிய அவனது கனவை நிறைவேற்றிக் கொள்ள சுயநலமாக சிந்திக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே முன்னிருத்துகிறது இந்நாவல். அவனது சுயநலத்தினால் அவன் மனைவி என்னென்ன கட்டுப்பாடுகளுக்கு ஆளாகிறாள் என குடும்பச் சூழலில் நடக்கும் ஆணாதிக்கத்தை காட்டும் பல காட்சிகள் அமைகின்றன. அதிகார மையமான முனிசிபல் சேர்மன், ஓவர்சீயரின் துணையோடு தோட்டிகளுக்கான சங்கம் அமைவதை தடுக்க சுடலைமுத்துவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். தான் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்தை விட தன் தனிமனித முன்னேற்றத்தை முக்கியமானதாகக் கொள்ளும் சுயநலவாதியான சுடலைமுத்து மற்ற தோட்டிகளுக்கும், நண்பனுக்கும் துரோகம் இழைக்கிறான். இது சமூகச் சூழலில் அதிகார வர்க்கம் அடித்தட்டு மக்களிடம் காட்டும் ஒடுக்குமுறையின் நிதர்சனமான பிரதிபலிப்பு.

தான் கழிவறை சுத்தம் செய்யும் வீடுகளில் வசிக்கும் உயர்சாதியினரின் பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆரம்பித்து பணம் சேமிக்கக் கற்றுக்கொள்கிறான் சுடலைமுத்து. அவன் வாழ்வின் பொருளாதர நிலை உயர்ந்தும், அவனின் சாதி அடையாளம் மட்டும் அவனையும் அவன் மகனையும் துரத்துகிறது. அதனால் அவன் தோட்டி தொழிலை ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற எத்தனிக்கிறான். அவன் மயானக் காவலாளியாக மாறுகிறான். அதுவே அவனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு மற்றும் அவனது சமூக நிலையின் உயர்வு. 

சாதிய படிநிலையின் அடுக்குகளும், அவற்றின் ஆழமும் கடக்க முடியாத மதில்களை ஒடுக்கப்பட்டோரின் முன் விரிக்கின்றன. சுடலைமுத்து போன்ற மனிதன் அவற்றை உடைக்க முற்படும் போது அவனுக்கு இருக்கும் மலைப்பை மீறி அந்த பாதையில் பயணிக்க வைப்பது அவனுக்கு இருக்கும் காரணம். முடிவில்லா அந்த பயணத்தையும், அதில் அவன் அனுபவிக்கும் வலிகளையும், சமூகச் சிக்கல்களையும் விவரிக்கிறது இந்நாவல்.

Wednesday 19 October 2022

“The Book of Cold Cases” by Simone St. James

An unsolved serial killer case for twenty years, a wealthy woman Beth who was acquitted in the trial, unanimous belief among the residents of the town that Beth was guilty, a part time blogger Shea who is bent upon unravelling the mysteries behind the serial killings form an interesting premise to this novel.




Beth agrees for an interview with Shea 20 years after the acquittal. Why Beth chose Shea? Why is she talking now after all these years? With the first half of the novel packed with intriguing suspense and interesting turn of events that keep unfolding seamlessly, it is a compelling page-turner. The pace of the novel slows down in the second half because of the climactic revelation at the end of the first half.

The non-linear narrative that shifts back and forth in the timeline establishing Beth’s past, Shea’s past and the happenings during the serial killings keeps the reader engrossed. The paranormal events around Beth’s house is a force-fit, but the writer makes use of it to unravel some of the mysteries. The parallels drawn between Shea and Beth from the start till the end establishes the connect between the two central characters on how they get along despite being on the opposite sides.

Even with an interesting premise, convincingly established timeline, well written character sketches, the novel falls short with the limited scope for any big revelations in the second half.

Friday 14 October 2022

அசோகமித்ரனின் "தண்ணீர்"

அசோகமித்ரனின் "தண்ணீர்" சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளால் வாழ்வில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று பெண்களின் கதை. 


கனவுகளை துரத்திக்கொண்டு, சினிமா வாய்ப்புத் தேடும் பெண்ணை சினிமா உலகம் எவ்வாறு நடத்தும் என்பதற்கு சாட்சியாய் ஜமுனா. ராணுவத்திலிருக்கும் கணவனைப் பிரிந்து தனது வேலைக்காக தன் மகனையும் உறவினரிடம் விட்டுவிட்டு தனிமையில் வாழும் ஜமுனாவின் தங்கை சாயா. குடும்ப சூழ்நிலையால் நோயாளி கணவனையும், குடும்ப செலவுகளையும், சுமைகளையும் வேறு வழியின்றி தாங்கும் டீச்சரம்மா. 

கற்பு என்ற நிலையை பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிர்ப்பந்தக் கற்புமுறையால் ஜமுனா சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்கள், அதன் விளைவாய் அவள் எடுக்கும் இடைக்கால முடிவுகள் பலவீனமானவை. ஜமுனாவின் போக்கு பிடிக்காமலும், கணவரின் இடமாற்றை எதிர்நோக்கியும் சாயா எடுக்கும் முடிவுகள் சுயநலமானவை. குழந்தையின்மையை பெண்ணின் குறையாக மட்டுமே கணிக்கும் சமூகத்தின் பார்வையால் டீச்சரம்மாவின் வாழ்வு பரிதாபமானது. 

இம்மூவரும் நகரத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை அவரவர் தேவைக்கேற்ப சமாளிக்க முற்படுகின்றனர். தண்ணீர் கிடைக்கும் பொருட்டு அவர்கள் பெறும் அனுபவங்களின் மூலம் அவர்களுள் நிகழும் உளவியல் மாற்றங்களும், அதன் விளைவாய் அவர்கள் வாழ்வில் எடுக்கும் தெளிவான முடிவுகளும் கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்கிறது. 

தண்ணீர் கிடைக்க தெரு மக்கள் படும் பாடு, தெரு ஓர குழாயடி சண்டை, அரசாங்கத்தின் அலட்சியம், கிசுகிசுக்களின் களமாக மாறும் குழாயடி என பிண்ணனியில் நடக்கும் சம்பவங்கள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன.

Monday 10 October 2022

"The Silent Patient" by Alex Michaelides

"The Silent Patient" is a psychological thriller which revolves around a woman Alicia who remains silent after being accused of murdering her husband. Her silence is unperturbed even when declared guilty by the court of law for her husband's murder. With her state of mind, the court sends her to therapy but she chooses to remain silent throughout the psychological treatment. Theo, a psychotherapist is bent upon breaking her silence and uncovering the mystery behind her silence. 

With each central character having a bad past or a disturbed childhood, the novel takes more time establishing them. The non-linear narrative builds up the suspense and propels the novel to a satisfying end.

The analogy to Greek tragedy "Alcestis" fits the storyline perfectly and the events that unfold towards the climax justify the same. 

Though the novel picks up pace midway with interesting turn of events, there are happenings which are added to increase the mystery quotient but do not get a proper closure. 

A decent thriller with its own share of shortcomings!

Sunday 9 October 2022

கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா"

கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" எனும் நூல் இளையராஜா அவர்களின் இசையை புதியதோர் கண்ணோட்டத்தில் அணுகுகிறது. இளையராஜாவின் இசைப் புலமையையும், திரையிசைப் பாடல்களிலும், பிண்ணணி இசையிலும் அவர் நிகழ்த்தும் அற்புதங்களையும் பல இயக்குனர்களின் மேடைப் பேச்சுகளின் மூலம் அறிந்திருப்போம். 

இளையராஜா அவர்கள் பாடல் வரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தையும், அவரது இசையில் கேட்கும் வார்த்தைகளின் தெளிவையும் பல பாடல்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணம் இளையராஜாவுக்கு இருந்த மொழிப் புலமை. அந்த மொழிப் புலமையையே இந்நூல் எடுத்துக்காட்டுக்களுடன் கையாள்கிறது. 


தமிழ் வார்த்தைகளின் சந்தத்தை வைத்துக்கொண்டு அவர் கட்டமைத்த இசை வடிவத்தையும், அதை சிரமமில்லாமல் கிராமத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்றடையும் வகையில் கடத்தியதையும் நமக்கு பரிச்சயமான பாடல்களைக் கொண்டு விவரிக்கிறார் கவிஞர். 

பாடலாசிரியராக இளையராஜாவின் வார்த்தை பிரயோகம், மற்ற பாடலாசிரியர்களின் வரிகளில் அர்த்தம் பிரழாமல் செய்யும் மாற்றங்கள், அதில் அவர் புகுத்தும் எளிமை ஆகியவற்றை கவிஞர் அவர் ரசித்த பாடல்களிலிருந்தும், அவருடன் பணியாற்றிய அனுபவத்திலிருந்தும் பகிர்கிறார். 

எளிய மக்களிடம் தனது இசைப் புலமையைக் காட்டி மிரள வைக்காது, அவர்கள் தேவைக்கேற்றவாறு, கதை நடக்கும் நிலப்பரப்பின் வட்டார மொழியின் வாயிலாக உணர்வுகளை கடத்துவதே இளையராஜாவின் அசாத்திய திறமை.

ஒரு பாடலாசிரியர் ஒரு இசையமைப்பாளரின் மொழிப் புலமையை பற்றி எழுதுவது இளையராஜா திரையிசையில் நிகழ்த்திய புரட்சிக்கும், யுகபாரதியின் திறந்த மனதிற்கும் - தெளிவான சிந்தனைக்கும் சான்று.

Monday 3 October 2022

திரு. டி. செல்வராஜ் எழுதிய "தோல்"

டி. செல்வராஜ் எழுதிய "தோல்" எனும் நாவல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வியலை பதிவு செய்து, நம்மை அவர்களின் உலகுக்கு இழுத்துச் செல்கிறது. அடிமை வாழ்விலிருந்து விடுபட அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும், சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும் அறவழி போராட்டங்கள் மூலமாக எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கின்றனர் என்பதே இந்நாவலின் மையக்கரு.


பல்வேறு ஊர்களிலிருந்து பிழைப்புக்காக வந்த மக்கள் முறி எழுதி கொடுத்து தோல் ஷாப்புகளில் சேர்வது வழக்கம். வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், கூலி அனைத்தும் அன்றாட தேவைகளுக்கும், சாராயத்துக்கும் தீரும் நிலையில் வட்டியும் கட்ட முடியாமல், அடிமைகளாக மரணிப்பதே இவர்களின் வாழ்க்கை. சாராயம் அவர்கள் உடல் வலியைப் போக்கிக்கொள்ள அத்தியாவசியமாகிறது. தோல் பதனிடும் முறையால் அவர்கள் நோயுற்று மரணிப்பதும் சகஜமான ஒன்று. ஊருக்குள் மாடு செத்து விழுந்தால் வந்து தூக்க கீழ்சாதியினரே பணிக்கப்படுவர். தோல் ஷாப்புத் தொழிலாளர்களும் அதே சாதியினர் தான். வர்க்க பேதம், சாதிய அடக்குமுறை இரண்டையும் இம்மக்கள் அனுபவிக்கும் அவலம். தீண்டாமையின் உச்சமாக காற்று கூட சேரியின் வாயிலாக போகாமல் ஊருக்குள் வருமளவுக்கான திட்டமிடல் ஊரையும் சேரியையும் பிரிப்பதில் இருந்திருக்கிறது.

தோல் ஷாப் ஒன்றில் அபலைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் முதலாளியின் மைத்துனனை ஓசேப்பு எனும் தொழிலாளி தாக்குகிறான். முதலாளியின் அடியாட்கள் அவனைத் தேட ஆரம்பிக்க, வெளியூருக்கு தப்பிச்  செல்ல எத்தனித்து ஓசேப்பு இரயில் நிலையத்தின் பொது கழிப்பறையில் மறைகிறான். பராமரிப்பில்லாத அந்த கழிவறையில் தேங்கி நிற்கும் மலத்தை சாக்கடையில் இருந்து வெளிவந்த பன்றி சுவைக்கிறது. அந்த காட்சியும், அந்த நாற்றமும் அவனை வெளியே துரத்தியிருக்க வேண்டும். அது தான் வாசகனின் எதிர்ப்பார்ப்பும். ஆனால், மலக்கழிவின் வாடை குடலைப் பிடுங்கினாலும், தோல் ஷாப்பின் ரத்தம் கலந்த நிணக்கழிவின் அழுகல் வாடையை விட மோசமாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு காட்சி தோல் ஷாப்பு வேலையின் கடினத்தையும், கொடூரத்தையும் விளக்கி நம்மை கலங்கடிக்கிறது. 

அடியாட்களிடம் பிடிபடும் ஓசேப்புக்கு ஆதரவாக வரும் கிருத்துவ பாதிரியாருடன் சேர்ந்து தொழிலாளர்கள் திரள்வதே தங்கள் முதலாளிகளுக்கெதிராக அவர்கள் எழுப்பும் முதல் குரல். தோல் ஷாப்பில் நடக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் எதிராக குரல் கொடுக்கும் தொழிலாளர்களை ஒன்றிணைக்க தொழிற்சங்க அமைப்புகள் உருவாகின்றன. அவை அவர்களின் ஊதிய உயர்வு, முறி ரத்து ஆகியவையோடு அவர்கள் சுயமரியாதையையும் மீட்டெடுக்க உதவுகின்றன. அனைவரும் ஒரு அமைப்பாய் அதிகார அத்துமீறல்களையும் மீறி முதலாளித்துவத்தையும், சாதிய முரணையும் சட்டத்தின் துணை நின்று எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதே நாவல் நெடுக பரவிக் கிடக்கிறது.

உயர்சாதி வக்கீல் சங்கரன், சுப்புவாடன் போன்ற துப்புரவு பணியாளர்கள், ஓசேப்பு போன்ற தோல் ஷாப் பணியாளர்கள் சங்கத்தில் இணைந்த பிறகு அவர்களுள் நிகழும் உளவியல் ரீதியான மாற்றங்களை பற்றிய விவரணை தொழிற்சங்கங்களின் பலத்தை பிரதிபலிக்கிறது. அனைவரையும் சமமாய் பார்த்தும் சேரி தெருவின் சகதிக்காடான நிலை, தோல் பதனிடும் மற்றும் மலம் அள்ளும் பணியாளர்கள் மீது வீசும் நாற்றம், அவர்களின் அழுக்குத் தோற்றம் அனைத்துக்கும் பழக சங்கரனுக்கு காலம் தேவைப்டுகிறது. சுப்புவாடன் போன்ற துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் சாதியின் விளைவாக வரும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவர முடியாமல் சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பு தடுக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இவ்விருவர் நடுவே உடைபடாத மதில்களை "தோழர்" என்ற ஒற்றைச் சொல் உடைத்தெரிகிறது. 

நாவலில் தனிமனித நாயக சாகசங்கள் ஏதும் இடம்பெறாது, உண்மைக்கு நெருக்கமாக, உணர்வு பூர்வமாக அமைகிறது கதையின் போக்கு. தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே நாவலின் நாயகன், அமைப்புக்கான கொள்கையின் துணையோடு நடத்தப்படும் சட்ட போராட்டங்களே சாகசங்கள்.

பொதுவுடைமை இயக்கங்களின் தேவையை உணர்த்தும் இந்நாவல் பல இடங்களில் மாக்ஸிம் கார்கியின் "தாய்" நாவலை நினைவூட்டுகிறது.

"My Childhood" by Maxim Gorky

Maxim Gorky's "My Childhood", his autobiography is a painful recollection of his childhood that was strewn with poverty, lonel...