Friday, 28 October 2022

அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்"

வண்ணமையமான சினிமா உலகத்தின் வெளிப்புற தோற்றம் பார்வையாளனுக்கும் ரசிகனுக்கும் சினிமா துறையை பற்றி ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை இன்றும் ஏற்படுத்துகிறது. ஆனால், சினிமா துறையில் உழலும் ஊழியர்களின் இருளடைந்த வாழ்வும், அவர்களின் வலியும் தான் எதார்த்தமே. 


அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்" சினிமா துறையில் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. படத் தயாரிப்பாளர், உதவி இயக்குனர், புரடக்க்ஷன் மேனேஜர், கோஷ்டி நடன பெண்கள், ஓட்டுநர்கள், செட் அஸிஸ்டன்ட், மற்ற கடைநிலை ஊழியர்கள் என பல மனிதர்களின் வாழ்க்கையையும், பசியையும், அவமானங்களையும், பொருளாதார நிலையையும் அப்பட்டமாக பதிவு செய்யும் நாவல். 

கோடி கணக்கில் பணம் புரளும் தயாரிப்பாளரின் சகல வசதிகள் கொண்ட வீட்டை விவரிக்கும் அதே சமயம் அவரின் நிம்மதியற்ற வாழ்வும், சிதைவுற்ற குடும்ப நிலையும், நிச்சயமற்ற வியாபாரமும் தரும் மன அழுத்தத்தையும் உள்ளது உள்ளபடி சொல்கிறது இந்நாவல். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழக்கும் ஊழியர்கள்,  பின்னாளில் பிச்சை எடுக்கும் அந்த நிறுவனத்தின் சிறந்த புரடக்க்ஷன் மேனேஜர் போன்றோரின் நிற்கதியான நிலை நம் கண்முன் விரிகிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் காலி செய்யப்படும்போது, அவர்கள் கடைசியாக எடுத்த காட்சியின் கிளாப் போர்ட்டை ஒரு கடைநிலை ஊழியன் உரிமையாக பிடுங்கிக் கொள்ளும் காட்சி சிறிதும் melodramatic ஆக இல்லாமல் அசோகமித்ரனின் எழுத்தில் வெளிப்படுகிறது. இந்நாவல் 1960-களின் சினிமா பற்றிய விவரணையானாலும், தங்கள் பசியை தேநீரின் சூட்டிலும், அவமானங்களை சிகரெட்டின் கசப்பான புகையிலும் போக்கிக் கொள்ளும் உதவி இயக்குநர்களின் சித்தரிப்பு இன்றும் பொருந்தும்.  

சினிமாவில் உழலும் மனிதர்களின் தோல்வியை பற்றி பேசும் மிகச் சிறந்த நாவல் "கரைந்த நிழல்கள்". நாவலில் வரும் எந்த கதாப்பாத்திரத்திலும் தன் கருத்தை திணிக்க முற்படாமல், அவர்களின் செயல்களை மதிப்பிடாமல், அவர்களின் இயல்பை மட்டும் கூறி நமக்கு அவர்களின் உலகத்தை அறிமுகம் செய்கிறார் அசோகமித்ரன்.

No comments:

Post a Comment

கவிஞர் மு.மேத்தாவின் "ஆகாயத்துக்கு அடுத்த வீடு"

கவிஞர் மு.மேத்தாவை நான் அறிந்தது திரைப்பாடல்கள் மூலமே. ரெட்டை வால் குருவி திரைப்படத்தில் வரும் "ராஜ ராஜ சோழன் நான்" பாடலும், காசி ...