Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts

Sunday, 18 January 2026

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை"

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை" சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலில் வரும் கவிதைகள் மனித இயல்பை பிரதிபலிப்பதோடு மனித வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களையும் பேசுகிறது. இயற்கையை கொண்டாடுவதோடு நில்லாமல், மனிதன் பரிணாம வளர்ச்சியினால் இயற்கையை அலட்சியப்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது இந்நூல். இயற்கையைக் கொண்டாடும் கவிதைகளில் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மனித மனங்களின் இருண்ட பக்கங்களையும், மனித எதிர்பார்ப்புகளின் முரணையும் அப்பட்டமாக பல கவிதைகளில் பதிவு செய்கிறது இந்நூல். 



உண்மையையும், தூய்மை எனும் போலியையும், இயற்கையையும், பேதமில்லா சமூகத்தையும், பாலின சமத்துவத்தையும், பகுத்தறிவையும் பேசும் பல கவிதைகள் இந்நூலில் பரவிக் கிடக்கின்றன. நம்மை நாமே self introspect (சுயபரிசோதனை) செய்யவும் இந்நூல் தூண்டுகிறது. 



என்னை கவர்ந்த சில கவிதை வரிகள்...

1. மனித புத்தி

அன்றொரு நாள் பார்த்தேன்

மரத்தடியில்
கூண்டுக்குள்ளிருந்து 
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
'வருங்காலத்'தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது

கிளியா இது?
இல்லை

வான வெளியில்
ஊஞ்சலாடிய 
அந்த ஆனந்தம் எங்கே?
எல்லாம் பறிப்போய் விட்டன

வடிவம் மட்டும் இருக்கிறது 
உள்ளடக்கம் இல்லை

கிளி 
மனிதனால் 
மனிதனாக்கப்பட்டுவிட்டது

இப்போது 
அது கூலிக்கு 
வேலை செய்கிறது 
மனிதனைப் போல

மற்றொரு நாள் பார்த்தேன்

என் வீட்டு வாசலில் 
ஒரு "பூம்பூம்" மாட்டுக்காரன்

அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருக்கிறது
மனிதனைப் போல

மாடு
மனிதனால் 
மனிதனாக்கப்பட்டுவிட்டது

இன்னொரு நாள் பார்த்தேன்

ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல

என் மனம் அழுதது

பறவைகளின் சுதந்திரத்தை
விளங்குகளின் கள்ளங் கபடமற்ற தன்மையை
மனிதன் கற்றுக்கொண்டிருக்கலாம்

இந்த உலகம் 
அழகாக இருந்திருக்கும்

ஆனால் அவனோ
பறவைகளுக்கும்
விலங்குகளுக்கும்
'மனித புத்தி’யைக்
கற்றுக்கொடுத்துவிட்டான்

விலங்கிலிருந்து
மனிதனானது
பரிணாம 'வளர்ச்சி' தானா?

2. ஒப்புதல் வாக்குமூலம் (பெண்களின் நிலை பற்றி ஓர் ஆணின் குற்ற உணர்ச்சி)
...
இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம்
நாம் வழுவமைதிகளாக இருந்தோம்
...

3. விளக்குகள்

...
இருட்டு என்ற ராட்சஸ எதிரியை
அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் 
சின்னஞ்சிறு வீரர்களே!
உங்கள் போராட்ட குணத்தை
எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்

எரியவும் எரிக்கவும் எங்களுக்குத் தெரியும்
ஆனால் உங்களைப் போல்
ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!

4. தவறான எண் (தொலைபேசியில் தவறான எண்ணில் சிக்கிய இறைவனிடம் கேள்விகள்)
...

இங்கே என்ன நடக்கிறது என்று பார்!

இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!

இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?

இந்த ராம் யார்? ரஹும் யார்?

பெயரில் என்ன இருக்கிறது என்றவன் பேதை பெயரால் அல்லவா இத்தனை பிரச்சனைகள்?

பெயர்களில் நீ இருக்கிறாயா?

...

தீமை அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிப்பேன் என்றாயே ?

இதை விடக் கொடிய காலம் ஏது?

எங்கே காணோம் உன் அவதாரம்?

இன்னும் எதற்காகப் பூக்களை உண்டாக்குகிறாய்?

இன்னும் எந்த நம்பிக்கையில் குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாய்?

ஆலய மணி ஓசையும் மசூதியின் அழைப்பொலியும்

காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம் இவர்களுக்கு எப்போது விளங்கும்?

கடைசியாகக் கேட்கிறேன்

நீ ஹிந்துவா? முஸ்லிமா?

“ராங் நம்பர்” என்ற பதிலோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

5. பற்று வரவு (இறக்கப் போகிறவனிடம்...)

வாங்கலை மட்டும் செய்தாயே!
கொடுக்கலைச் செய்தாயா?

எந்தக் கையாலோ
சுடர் ஏற்றப்பட்டவனே!
ஒரு விளக்கையாவது 
நீ ஏற்றிவிட்டுப் போகவேண்டாமா?

மொத்தமாகச் செத்துப் போகிறாய்!
கொஞ்சம் சில்லறையாகவாவது
நீ இங்கே இருக்க வேண்டாமா?

மரணக் காற்றில்
ஒரு விளைக்கைப் போல்
அணைந்து போகாதே!
ஓர் ஊதுவத்தியைப் போல்
கொஞ்சம் நறுமணமாவது
விட்டு விட்டுப் போ!

உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச் செல்!
மண்ணில் ஒரு காயத்தை அல்ல
ஒரு மருந்தை விட்டுச் செல்!

ஒரு தடயமும் இல்லாமல்
மறைவதற்கு வெட்கப் படு!

குற்றவாளிதான் அப்படிச் செய்வான்.

6. ஒரு மேகத்தைப் போல்
...
"மேகமே!
உன்னைப் போல்
கவலையில்லாத சஞ்சாரம்
எனக்கு வேண்டும்"

"கடிவாளங்களைத்
தூர எறி!
ஒரு திசை இலட்சியத்தைத்
துற!
எல்லாத் திசைகளும்
உனக்குக் கிடைக்கும்"
...


7. அந்த இடம் (காற்றிடம் கேட்க...)
...
நெடு நாட்களாகவே 
எனக்கு ஒரு சந்தேகம்

விளக்குகளில் இருந்து 
பறிக்கும் சுடர்களை

பூக்களிலிருந்து 
திருடும் நறுமணத்தை 

வீணையில் இருந்து 
கவர்ந்த இசையை

எங்கே கொண்டு போய் 
ஒளித்து வைக்கிறாய்?

ஒலியும்
ஒளியும்
மணமும்
சஙகமித்துப்
பேதமற்றிருக்கும்
அந்த இடத்திற்கு
என்னையும்
அழைத்துச் செல்!

Friday, 30 August 2024

ந. பிச்சமூர்த்தியின் "ஜம்பரும் வேஷ்டியும்"

ந.பிச்சமூர்த்தியின் "ஜம்பரும் வேஷ்டியும்" எனும் சிறுகதைத் தொகுப்பு எட்டு கதைகளை உள்ளடக்கியது. இந்த தொகுப்பில் வரும் கதைகள் மனிதர்களின் இயல்பையும், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான மனநிலையையும் பேசுகின்றன. இங்கே என்னைக் கவர்ந்த நான்கு கதைகளைக் குறிப்பிடுகிறேன்.


"கலையும் பெண்ணும்" எனும் கதை பார்வையற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்யும் ஒரு ஓவியனைப் பற்றிய கதை. எளிமையான இக்கதையில் வரும் நிகழ்வுகள் ஒரு பெண்ணின் "consent” பற்றி மிக நுட்பமாக விவாதிக்கிறது. இக்கதையே இந்த தொகுப்பில் வரும் கதைகளில் ஆகச் சிறந்தது. 


"நல்ல வீடு" எனும் கதை ஒரு கிளப்பாக இருந்த வீட்டில் குடியேரும் ஒரு போலீஸ்காரர் மனைவி அனுபவிக்கும் சச்சரவைப் பற்றிய கதை. இன்னும் "கிளப்" தான் அந்த வீட்டில் இயங்குகிறது என நினைத்து வரும் ஆண்களை எவ்வாறு அந்த பெண் எதிர்கொள்கிறாள் என்பதை நகைச்சுவையாக விவரிக்கிறது. வசதிக்கு பழக்கப்பட்ட பெண், அந்த வசதியை நாடிப் போவதால் வரும் விளைவுகள், சமூகத்தின் எதிர்பார்ப்புகளால் சந்திக்கும் தேவையற்ற சிக்கல்கள், அதன் விளைவாய் பல நேரங்களில் சமூகத்தோடு ஒத்துப்போகும் கட்டாயம் ஏற்படுதல் ஆகியவற்றை பேசுகிறது.

"ஜம்பரும் வேஷ்டியும்" இரு நண்பர்களைப் பற்றிய கதை. எதையும் எதிர்பாரா நட்பையும், நட்பின் புரிதலையும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களின் வழக்கத்தையும் பேசுகிறது. கதையில் வரும் ஒரு பிரச்சினை கணவன்-மனைவியிடையே பேசப்படும் போது பெரிதாகவும், அதே சமயம் நண்பர்களிடையே பேசப்படும் போது சிறிதாகவும் தெரியும் முரணை வெளிப்படுத்துகிறது. ஆங்காங்கே வரும் stereotypes-களை தவிர்த்து ஆண்-ஆண், ஆண்-பெண், பெண்-பெண் உறவுகளையும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அபிப்பிராயங்களையும் உள்ளது உள்ளபடி காட்டுகிறது.

"வித்யாசம்" எனும் கதை எழுதப்பட்ட காலத்தில் ஆண்களுக்குண்டான வரட்டு கவுரவத்தையும், சின்ன சின்ன விஷயங்களில் கூட இருக்கும் egoistic மனநிலையையும் பேசுகிறது. அதே விஷயங்களில் பெண்களுக்கு இருக்கும் contrasting open-minded attitude பற்றியும் நகைச்சுவையாய் நம்மிடையே கடத்துகிறது. அதே சமயம் பிறரிடம் பழக ஆண்களுக்கு இருக்கும் தடை உடையும் தருணத்தையும் அப்பட்டமாக உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறது.

இத்தொகுப்பில் பகுத்தறிவு, நாட்டார் தெய்வ வழிபாடு, ஜோதிடம் போன்றவை பற்றியும் கதைகள் அமைகின்றன. எளிய மொழிநடையில் ஆழமான மெய்யியல் கோட்பாடுகளை கடத்துகிறது இந்நூல். 

Saturday, 22 October 2022

கவிஞர் நா. முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்"

சிறு வயதில் பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்காக ஏங்கி, சண்டையிட்டு இடம்பிடித்த நாம் தான் இன்று பேருந்து கிளம்பி அடுத்த நிமிடமே தூங்கி விழுகிறோம் - அது எவ்வளவு சிறிய பயணாமாயினும். வேடிக்கை பார்ப்பது வெளி உலகத்தையும், இயற்கையையும் நமக்கு சிறு வயதில் அறிமுகம் செய்தது. இன்றோ வெளி உலகையும் இயற்கையையும் ரசிக்க நேரமில்லாமல், பல நேரங்களில் சோர்வின் சாயல் முகமுழுதும் படர,  இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். தனது வாழ்வையே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கவிஞர் இந்த தன் வரலாற்று நூலில் பல இடங்களில் நம்மையும் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறார்.


நா. முத்துக்குமார் தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கும் "வேடிக்கை பார்ப்பவன்" அவரது அனுபவங்களின் மூலம் வாழ்க்கை தத்துவங்களை நம்மிடையே கடத்துகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையோடு சேர்ந்து இயற்கையையும், நம்மோடு நடமாடும் மனிதர்களையும் ரசிக்கத் தூண்டுகிறது. எழுத்துப் புலமையைக் காட்டி வாசகனை மிரள வைக்காது, சாமானியனும் ரசிக்கும் எளிய மொழிநடையில் அமைகிறது இந்நூல். வாழ்விலும் சரி, எழுத்திலும் சரி எளிமை தான் நா.முத்துக்குமாருக்கு அடையாளம். அந்த எளிமையே அவரது திரையிசை பாடல்களிலும் பிரதிபலித்தது.

கவிஞரின் பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நடந்த சம்பவங்களில் பல வாசகனின் வாழ்விலும் நடந்திருக்கும் - அவை வாசகனுக்கு ஒரு nostalgic experience ஆக அமைகின்றன. 

"ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?", 

"இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக் கொள்வான்.", 

"தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள் பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தான்.",

"நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம்", 

"காதல் தோல்விதானோ யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு" 

போன்ற வரிகளில் வரும் பிரம்மிப்பூட்டும் கற்பனைகள் எளிய மொழி வடிவத்தில் இந்த புத்தகம் நெடுக பரவிக்கிடக்கின்றன. இவையே நா. முத்துக்குமாரின் "Trademark". 

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி தான் நா. முத்துக்குமார். 

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...