Showing posts with label Kavithai Thoguppu. Show all posts
Showing posts with label Kavithai Thoguppu. Show all posts

Sunday, 18 January 2026

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை"

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை" சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலில் வரும் கவிதைகள் மனித இயல்பை பிரதிபலிப்பதோடு மனித வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களையும் பேசுகிறது. இயற்கையை கொண்டாடுவதோடு நில்லாமல், மனிதன் பரிணாம வளர்ச்சியினால் இயற்கையை அலட்சியப்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது இந்நூல். இயற்கையைக் கொண்டாடும் கவிதைகளில் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மனித மனங்களின் இருண்ட பக்கங்களையும், மனித எதிர்பார்ப்புகளின் முரணையும் அப்பட்டமாக பல கவிதைகளில் பதிவு செய்கிறது இந்நூல். 



உண்மையையும், தூய்மை எனும் போலியையும், இயற்கையையும், பேதமில்லா சமூகத்தையும், பாலின சமத்துவத்தையும், பகுத்தறிவையும் பேசும் பல கவிதைகள் இந்நூலில் பரவிக் கிடக்கின்றன. நம்மை நாமே self introspect (சுயபரிசோதனை) செய்யவும் இந்நூல் தூண்டுகிறது. 



என்னை கவர்ந்த சில கவிதை வரிகள்...

1. மனித புத்தி

அன்றொரு நாள் பார்த்தேன்

மரத்தடியில்
கூண்டுக்குள்ளிருந்து 
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
'வருங்காலத்'தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது

கிளியா இது?
இல்லை

வான வெளியில்
ஊஞ்சலாடிய 
அந்த ஆனந்தம் எங்கே?
எல்லாம் பறிப்போய் விட்டன

வடிவம் மட்டும் இருக்கிறது 
உள்ளடக்கம் இல்லை

கிளி 
மனிதனால் 
மனிதனாக்கப்பட்டுவிட்டது

இப்போது 
அது கூலிக்கு 
வேலை செய்கிறது 
மனிதனைப் போல

மற்றொரு நாள் பார்த்தேன்

என் வீட்டு வாசலில் 
ஒரு "பூம்பூம்" மாட்டுக்காரன்

அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருக்கிறது
மனிதனைப் போல

மாடு
மனிதனால் 
மனிதனாக்கப்பட்டுவிட்டது

இன்னொரு நாள் பார்த்தேன்

ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல

என் மனம் அழுதது

பறவைகளின் சுதந்திரத்தை
விளங்குகளின் கள்ளங் கபடமற்ற தன்மையை
மனிதன் கற்றுக்கொண்டிருக்கலாம்

இந்த உலகம் 
அழகாக இருந்திருக்கும்

ஆனால் அவனோ
பறவைகளுக்கும்
விலங்குகளுக்கும்
'மனித புத்தி’யைக்
கற்றுக்கொடுத்துவிட்டான்

விலங்கிலிருந்து
மனிதனானது
பரிணாம 'வளர்ச்சி' தானா?

2. ஒப்புதல் வாக்குமூலம் (பெண்களின் நிலை பற்றி ஓர் ஆணின் குற்ற உணர்ச்சி)
...
இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம்
நாம் வழுவமைதிகளாக இருந்தோம்
...

3. விளக்குகள்

...
இருட்டு என்ற ராட்சஸ எதிரியை
அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் 
சின்னஞ்சிறு வீரர்களே!
உங்கள் போராட்ட குணத்தை
எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்

எரியவும் எரிக்கவும் எங்களுக்குத் தெரியும்
ஆனால் உங்களைப் போல்
ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!

4. தவறான எண் (தொலைபேசியில் தவறான எண்ணில் சிக்கிய இறைவனிடம் கேள்விகள்)
...

இங்கே என்ன நடக்கிறது என்று பார்!

இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!

இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?

இந்த ராம் யார்? ரஹும் யார்?

பெயரில் என்ன இருக்கிறது என்றவன் பேதை பெயரால் அல்லவா இத்தனை பிரச்சனைகள்?

பெயர்களில் நீ இருக்கிறாயா?

...

தீமை அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிப்பேன் என்றாயே ?

இதை விடக் கொடிய காலம் ஏது?

எங்கே காணோம் உன் அவதாரம்?

இன்னும் எதற்காகப் பூக்களை உண்டாக்குகிறாய்?

இன்னும் எந்த நம்பிக்கையில் குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாய்?

ஆலய மணி ஓசையும் மசூதியின் அழைப்பொலியும்

காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம் இவர்களுக்கு எப்போது விளங்கும்?

கடைசியாகக் கேட்கிறேன்

நீ ஹிந்துவா? முஸ்லிமா?

“ராங் நம்பர்” என்ற பதிலோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

5. பற்று வரவு (இறக்கப் போகிறவனிடம்...)

வாங்கலை மட்டும் செய்தாயே!
கொடுக்கலைச் செய்தாயா?

எந்தக் கையாலோ
சுடர் ஏற்றப்பட்டவனே!
ஒரு விளக்கையாவது 
நீ ஏற்றிவிட்டுப் போகவேண்டாமா?

மொத்தமாகச் செத்துப் போகிறாய்!
கொஞ்சம் சில்லறையாகவாவது
நீ இங்கே இருக்க வேண்டாமா?

மரணக் காற்றில்
ஒரு விளைக்கைப் போல்
அணைந்து போகாதே!
ஓர் ஊதுவத்தியைப் போல்
கொஞ்சம் நறுமணமாவது
விட்டு விட்டுப் போ!

உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச் செல்!
மண்ணில் ஒரு காயத்தை அல்ல
ஒரு மருந்தை விட்டுச் செல்!

ஒரு தடயமும் இல்லாமல்
மறைவதற்கு வெட்கப் படு!

குற்றவாளிதான் அப்படிச் செய்வான்.

6. ஒரு மேகத்தைப் போல்
...
"மேகமே!
உன்னைப் போல்
கவலையில்லாத சஞ்சாரம்
எனக்கு வேண்டும்"

"கடிவாளங்களைத்
தூர எறி!
ஒரு திசை இலட்சியத்தைத்
துற!
எல்லாத் திசைகளும்
உனக்குக் கிடைக்கும்"
...


7. அந்த இடம் (காற்றிடம் கேட்க...)
...
நெடு நாட்களாகவே 
எனக்கு ஒரு சந்தேகம்

விளக்குகளில் இருந்து 
பறிக்கும் சுடர்களை

பூக்களிலிருந்து 
திருடும் நறுமணத்தை 

வீணையில் இருந்து 
கவர்ந்த இசையை

எங்கே கொண்டு போய் 
ஒளித்து வைக்கிறாய்?

ஒலியும்
ஒளியும்
மணமும்
சஙகமித்துப்
பேதமற்றிருக்கும்
அந்த இடத்திற்கு
என்னையும்
அழைத்துச் செல்!

Monday, 22 January 2024

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமாரின் ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல். கவிதைகளில் இடம்பெரும் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் தமிழ் திரையுலகில் முத்துக்குமாரின் நிரப்பப்படா இடத்தை நினைவூட்டுகிறது. அவரது எழுத்துக்கள் இயல்பானவை, தனது புலமையைக் காட்டி வாசகனை என்றுமே திக்குமுக்காட செய்ததில்லை. 

தினம்தினம் நாம் சந்திக்கும் மனிதர்களையும், நம்மை சுற்றி நடக்கும் சாதாரண நிகழ்வுகளையும், நமது உணர்வுகளையும் நமக்கு நெருக்கமான மொழியில் இக்கவிதைகளில் தருகிறார். 



கவிஞர் தனது பால்யத்தை விவரிக்கும் கவிதைகளில் அம்மா, அப்பா மற்ற உறவுகளுடன் பள்ளி அனுபவங்கள், நண்பர்களின் நினைவுகள் என அடுக்கும் போது, அவை நம்முடைய பால்யத்தை நினைவூட்டும் ஒரு nostalgic experience ஆக அமைகிறது.



அவர் கடவுளை விடவும் இயற்கையை அதிகமாக விரும்பியதை பல இடங்களில் காண முடிகிறது. பகுத்தறிவு கருத்துக்களுடன் பெண் விடுதலை, பாலின சமத்துவம் பேசும் கவிதைகள் இந்த தொகுப்பு முழுக்க நிரம்பி இருக்கின்றன. சமகால சமூக சூழலை பிரதிபலிக்கும் கவிதைகள் கவிஞரின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் பதிவு செய்கின்றன. 

"தூர்" எனும் கவிஞரின் பிரசித்தி பெற்ற கவிதையைத் தவிர்த்து என்னை கவர்ந்த சில கவிதைகள்...

அம்மாவின் கரிச் சுவர்

ஒவ்வொறு பொங்கலுக்கும்
வெள்ளையடித்தாலும்
மீண்டும் தன் முகத்தில்
கரி பூசிக்கொள்கிறது
சமையலறைச் சுவர்.

...

அம்மாவுக்காய் அழுகிற
ஈர விறகுகளின்
புகைச் சோகம் தாங்கி
மேலும் கறுக்கும் அது.

...
அக்காவுக்கு இவற்றிலிருந்து 
சீக்கிரம் விடுதலை.

கல்யாணம் ஆனதும்
கேஸ் குக்கர்
சுவரில் டிஸ்டெம்பர்

சுவர் விடுதலை மட்டும் 
பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்து விட்டார்கள்.


இட்லி புத்திரர்கள்

இட்லிகள் கொள்கையற்றவை
சாம்பாரில் மிதவையாகவும்
சட்னியில் துவையலாகவும்
ஏதுமற்ற பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

பெயர் உருவான கதை

ஆரம்பத்தில் அதன் பெயர்
வேறாக இருந்தது.

அதன் பலகீனம்
இருபுறம் சுவர் சூழ்ந்த
குறுபாதை எனலாம்.

...

ஆத்திரம் மட்டுமே
அடக்கக் கற்ற
மனிதர்கள் கூடி
அதற்கொரு பெயர்
அப்புறம் வைத்தனர் 
மூத்திரச் சந்து.

சலூன் கண்ணாடிகள்

பிமபங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்.

நியூட்டனின் மூன்றாம் விதி

மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம் 
அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில்.

...

உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.

எனதருமை மேல்தளத்து நண்பா...
தலையணையையும் மீறி 
உன்காதுகளில்
சுழன்றுகொண்டிருக்கும்
என் மின்விசிறி!

கட்டணக் கழிப்பிட உரிமையாளன்

ஆச்சா... ஆச்சா... குரல் கொடுத்தபடி
மதிய உணவு உண்கிறான்
கட்டணக் கழிப்பிட உரிமையாளன்.

லிஃப்ட் பயம்

வழக்கம்போல இம்முறையும்
லிப்ட்டில் பயணிக்கையில்
அலாரத்தையே பார்க்கிறேன்.

கோயிலில் ஒதுங்கியவர்கள்

பலத்த மழை
வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கோயிலில் ஒதுங்கியவர்கள்.

பல்லக்கு தூக்கிகள்

சாமியின் முகத்தில்
சந்தனக் காப்பு
பல்லக்கு தூக்கிகளின் சாராயநெடி

நிழல்

ஜன்னல் கம்பியை வளைத்தது
திருடனல்ல
நிழல்.

தலையணை வாத்துகள்

வாத்துகள்
ரெக்கைகள் இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை.
பிறந்த வீடு, புகுந்த வீடு என
பெண்களைப்போலவே
தண்ணீருக்கும் தரைக்கும்
அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை!

குழந்தைகளுடன் பேசும் கலை

எல்லோரும் ஒரு காலத்தில் 
குழந்தையாக இருநதாலும்
வளர்ந்த பின்
தொலைந்துவிடுகிறது
குழந்தைகளின் உலகத்தைத்
திறக்கும் சாவி.



Tuesday, 21 November 2023

யுகபாரதியின் "முனியாண்டி விலாஸ்"

"முனியாண்டி விலாஸ்" என கவிதை தொகுப்பிற்கு பெயரிட்டதே இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. இன்று முனியாண்டி விலாஸ் நலிந்து பல கிளைகளை மூடி வந்தாலும், எஞ்சி இருக்கும் கிளைகள் மேற்கத்திய உணவை இங்கே பரப்பி வரும் கேஎஃப்சி-களையும், மெக்டோனால்ட்ஸ்-களையும் எதிர்த்து நிற்கும் தனித்துவம் கொண்டவை. அதே தனித்துவம் இக்கவிதை தொகுப்பில் தென்படுகிறதா?



இத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணவு, உடை, உறவுகள், உணவகம், மழை, கல்வி நிலையங்கள், காதல், காமம், சமூக நிலை, சாதி, அரசியல் ஆகியவை பற்றிய கருத்துகளுடன் கவிஞரின் கருத்தியலையும் தாங்கி நிற்கின்றன. அரசியல் தலைவர்களை பற்றிய விமர்சனங்களுடன் தேர்தல் அரசியல் நகர்வுகளையும், வாக்காளர் மனநிலையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள். அரசியல் சார்ந்த கவிதைகளை தாண்டி உணவு,  காதல் பற்றிய கவிதைகளிலும் அவற்றை சுற்றிய அரசியல் இடம்பெற்று சமகால சமூக சூழலை பிரதிபலிக்கிறது. 

பொது இடங்களில் சாதிய பாகுபாட்டையும், வர்க்க வேறுபாட்டையும் தூக்கிப் பிடிக்கும் நிலையை உணவகங்கள் பற்றிய கவிதை பேசுகிறது. அசைவ உணவின் மணம் பல கவிதைகளில் வீசுகிறது. அடுக்கக வாழ்க்கை பற்றிய கவிதை அடுக்கு மாடி வீடுகளில் வாழும், நிற்க கூட நேரமில்லாமல் ஓடும் மனிதர்களின் அவல நிலையை பேசுகிறது. 

பல கவிதைகள் முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும், ஆங்காங்கே சில கவிதைகள் பொதுவான மனநிலையில் தென்படுகின்றன. 

நம்மைச் சுற்றி நிகழும், நாம் கவனித்த-கவனிக்க மறந்த தருணங்களை நமக்கு நெருக்கமான மொழியில் இப்புத்தகம் வழங்குகிறது.

என்னை கவர்ந்த சில வரிகள் -

அடுக்கக வாழ்க்கை

"மனித வாடையைத் தவிர்க்கலாம் 
தனித்திருக்கலாம் 
அழைப்பு மணிக்கு மட்டும் 
கதவைத் திறந்தால் போதும் 

சொந்தங்கள் வந்தாலும் 
இரண்டொரு நாளில் ஊருக்குக் 
கிளம்பிவிடுவார்கள் 

கோழிச் சண்டையோ 
குழாயடிச் சண்டையோ வராது 

பாதங்கள் தரையில் பாவாத 
கால் நகங்களில் அழுக்கேறாத 
சவத்திற்கு ஒப்பான 
ஒரு வாழ்வை மேற்கொள்ள 

அடுக்கக வாழ்க்கை 
அற்புத வாழ்க்கை"

முனியாண்டி விலாஸ்

"முனியாண்டி விலாஸ் 
ஓர் அசைவ உணவகம். ஆனாலும் 
அங்கே, சைவத்திற்கு இடமில்லாமல் 
போவதில்லை 

முனியாண்டி விலாஸ் 
எளிய மனிதர்களின் கூடாரம் 
பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்களை 
அங்கே பார்க்க முடியாது 

நெடிய காத்திருப்பிற்குப் பின்தான் 
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை 
முனியாண்டி விலாஸ் செய்வதில்லை 

அங்கே, ஆங்கில மெனுக்கார்டு கிடையாது 
ஆர்டர் எடுத்துக்கொள்ளபவர்,நம்மிலும் 
வறிய வாழ்வை மேற்கொள்பவராயிருப்பார் 

மேசைத்துடைப்பவர் மேலாளர் என்னும் 
பாகுபாடுகள் அங்கே இல்லை 
எல்லாரும் எல்லா வேலைகளையும் 
இழுத்துப்போட்டு செய்வர் 

அங்கே, 
சீர்காழியும் சிதம்பரம் ஜெயராமனும் 
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்கள் மெருகேற்றிக்கொள்வர் 

கொல்வது பாவிமாயிற்றே என்று 
அங்கே யாரும் குமைவதில்லை

...

முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு 
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ அலையாது 

இறக்குமதி செய்யப்பட்ட 
சமையற்குறிப்புகளை அங்கே உள்ள மாஸ்டர்கள் பழகிக்கொள்ள விரும்புவதில்லை

...

முனியாண்டி விலாஸ் 
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும் முனியாண்டியாகவே பார்க்கிறது 

கணினிக்கும்  டிஸ்யூ பேப்பருக்கும் 
மயங்காத முனியாண்டி விலாஸ் தன் 
அசலான முகத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்வதில்லை 

முனியாண்டிகளுக்காக 
முனியாண்டிகளால் நடந்தப்படும் 
முனியாண்டி விலாஸ் 
ஒரு சமூகத்தின் செயல்பாடு 
ஒரு சமூகத்தின் அடைபாளம் 
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர் 

முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அங்கே வருவதில்லை முனியாண்டிகளை உணராதவர்களும் 
அங்கே வருவதில்லை"


உணவகம்

"அசைவ உணவகத்தில் 
எக்ஸ்ட்ரா வாங்காதவன் 
தலித்தாக நடத்தப்படுவான் 

மெல்லிய போதையோடு 
வருகிறவர்களுக்கு 
ராஜமரியாதை 

ஒரே ஒரு ஆம்லெட் என்றதும் 
முகம் சுருங்கி 
யாருக்கோ வைப்பதுபோல 
வைத்துவிட்டுப் போகிறவனுக்குத் 
தெரியாது 

நான் வேறொரு உணவகத்தில் 
கோப்பை கழுவுபவனென்று."


வேதாள தேவதை

"அதிகாரம் கைக்குவந்த பிறகு 
ஒவ்வொரு 
தேவதையும் வேதாளமாகிவிடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள் 

அவர்களால் 
நம்பவே முடியாத இன்னொன்று : 
தம்மால் வென்ற வேதாளம் 
தம்மை வீழ்த்துவதற்கு தேவதையாக 
வேடமிட்ட விஷயம்தான்."

ஒரு சின்ன கற்பனை

"கடவுள் என்று சொல்லப்படுபவர் 
நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தால் 
எப்படி இருக்கும்? 

இரவல் வாங்கலாம் 
தேவையெனில் கடன் கேட்கலாம் 
எங்கே காணோமே எனலாம் 
வீட்டில் விருந்தாளியா எனச் சிரிக்கலாம் 
இன்று விடுமுறையா 
உங்கள் லைனிலாவது கரண்ட் இருக்கிறதா 
பேப்பர் பார்த்தீர்களா என 
எதையாவது கேட்டுக்கொண்டே 
இருக்கலாம் 

பக்கத்தில் இருக்க வேண்டிய ஒருவர் 
உள்ளே இருந்து  ஒரு பிரயோசனமும் 
இல்லை." 

Jason Kasper’s “The Spider Heist”

“The Spider Heist” is the first instalment in a series of heist thrillers by Jason Kasper. Blair Morgan, a former FBI covert-entry speciali...