Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Saturday, 31 January 2026

கவிஞர் மு.மேத்தாவின் "ஆகாயத்துக்கு அடுத்த வீடு"

கவிஞர் மு.மேத்தாவை நான் அறிந்தது திரைப்பாடல்கள் மூலமே. ரெட்டை வால் குருவி திரைப்படத்தில் வரும் "ராஜ ராஜ சோழன் நான்" பாடலும், காசி திரைப்படத்தில் வரும் "என் மன வானில்" பாடலும் தான் மு.மேத்தாவை எனக்கு அறிமுகப்படுத்தின. 

"""கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே"""

“""இறைவனிடம் வரங்கள் கேட்டேன்…
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்…
மனிதரில் இதை யாரும் அறிவாரோ…

நான் பாடும் பாடல் எல்லாம்…
நான் பட்டபாடே அன்றோ…
பூமியில் இதை யாரும் உணர்வாரோ…

மனதிலே மாளிகை வாசம்…
கிடைத்ததோ மர நிழல் நேசம்…
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…

ராகம் உண்டு தாளம் உண்டு…
என்னை நானே தட்டிக்கொள்வேன்…
என் நெஞ்சில் உண்மையுண்டு…
வேறென்ன வேண்டும்…”""

- போன்ற வரிகளில் ஈர்க்கப்பட்ட நான், மு.மேத்தாவின் கவிதைகளை வாசிக்க எத்தனித்தேன். "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" கவிதைத் தொகுப்பை புத்தகக் கண்காட்சியில் தேர்ந்தெடுத்தேன். 


இந்த கவிதைத் தொகுப்பில் காதல், இயற்கை, மனித இயல்பு ஆகியவற்றைப் பற்றிய கவிதைகளிருந்தும், அரசியல் நையாண்டியும், சமூக அவலநிலை பற்றிய கோபமும் பல கவிதைகளில் பிரதானமாக தென்படுகின்றன. சமகால அரசியல் நிகழ்வுகளையும் கவிதைகள் மூலம் பதிவு செய்கிறார் மு. மேத்தா. இன்றைய சூழலுக்கும் அக்கவிதைகள் பொருந்திப் போகின்றன. பழகிப்போன கற்பனைகள் ஆங்காங்கே இருந்தாலும் மக்களுக்கு நெருக்கமான மொழியில், வாசகர்களைத் திணரடிக்காமல் எளிய சொற்களை கையாள்கிறார் கவிஞர்.



என்னை கவர்ந்த சில வரிகள் -

***இந்தியா என் காதலி***

....
உன் மைய மண்டபத்தில்
குயில்களின் குரலை
அவைக் குறிப்பிலிருந்து
நீக்க வேண்டுமென்று
காக்கைகள்
கலகம் செய்கின்றன.
....
இராம ஓவியம் 
தீட்டுவதற்கு 
இரத்தம் போதவில்லை
என்று
சத்தம் போடுகின்றன
தூரிகைகள்...

நீயோ 
"தூரிகை வாழ்க" என்று
பேரிகை கொட்டுகிறாய்!
....
எந்த நேரத்தில் 
இடிப்பார்களோ
எந்த நேரத்தில் 
வெடிப்பார்களோ
என்று
ஊர் ஊராகக்
கடவுள்
ஒளிந்து வாழ்கிறான்...

அன்னிய முதலாளிகளின் 
கோப்பைகளை எமது
குருதியால் நிரப்பிவிட்டு
அவர்களது
குளிர்பானங்களால்
எம்மைக்
குளிரவைக்கப் பார்க்கிறாய்...

ராமராஜ்யக்
கனவுகள்
மெல்ல மெல்ல
ரோம ராஜ்யக்
கனவுகளாய் 
மாறிவருகின்றன...


***எழுத்தெனப் படுவது***
அதை நான் 
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்...
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்!

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத் தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்...



***விளக்குகளின் விழா***
...
ஒற்றை விழிச்சுடரால்
விளக்கு
உற்றுப் பார்க்கிறது...
இருட்டு எங்கேனும் 
ஒளிந்துள்ளதா
என்று.

திடீரென்று
சோகம் விளக்கைச்
சூழ்ந்து கொள்கிறது.

நிழலாய் உடன் நிற்கும்
சொந்த இருட்டினைத்
துரத்த முடியவில்லையே...


***ஓர் உரையாடல்***
(2002-2003 காவிரி பிரச்சினை)

“செப்புத் தகட்டில்
எழுதுவதா?
கல்லில் 
செதுக்குவதா?
எதில் எழுதிவைத்தால் 
நிலைக்கும் 
இந்திய ஒருமைப்பாடு?"
என்றார்.

தயங்காமல் சொன்னேன்
"தண்ணீரில் எழுதுங்கள்"
என்று.

"நீர்மேல் எழுத்து 
நிலைக்காதே" என்றார்.

"நீரில் எழுதாவிட்டால் 
இந்திய ஒருமைப்பாடு 
நிலைக்காதே" என்றேன்.

"எந்த நீரில் 
எழுதச் சொல்வது?" என்றார்.

"கிருஷ்ணாவைக் கூப்பிட்டுக்
காவிரியில்
எழுதச் சொல்லுங்கள்"
என்றேன்.

Monday, 22 January 2024

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமாரின் ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல். கவிதைகளில் இடம்பெரும் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் தமிழ் திரையுலகில் முத்துக்குமாரின் நிரப்பப்படா இடத்தை நினைவூட்டுகிறது. அவரது எழுத்துக்கள் இயல்பானவை, தனது புலமையைக் காட்டி வாசகனை என்றுமே திக்குமுக்காட செய்ததில்லை. 

தினம்தினம் நாம் சந்திக்கும் மனிதர்களையும், நம்மை சுற்றி நடக்கும் சாதாரண நிகழ்வுகளையும், நமது உணர்வுகளையும் நமக்கு நெருக்கமான மொழியில் இக்கவிதைகளில் தருகிறார். 



கவிஞர் தனது பால்யத்தை விவரிக்கும் கவிதைகளில் அம்மா, அப்பா மற்ற உறவுகளுடன் பள்ளி அனுபவங்கள், நண்பர்களின் நினைவுகள் என அடுக்கும் போது, அவை நம்முடைய பால்யத்தை நினைவூட்டும் ஒரு nostalgic experience ஆக அமைகிறது.



அவர் கடவுளை விடவும் இயற்கையை அதிகமாக விரும்பியதை பல இடங்களில் காண முடிகிறது. பகுத்தறிவு கருத்துக்களுடன் பெண் விடுதலை, பாலின சமத்துவம் பேசும் கவிதைகள் இந்த தொகுப்பு முழுக்க நிரம்பி இருக்கின்றன. சமகால சமூக சூழலை பிரதிபலிக்கும் கவிதைகள் கவிஞரின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் பதிவு செய்கின்றன. 

"தூர்" எனும் கவிஞரின் பிரசித்தி பெற்ற கவிதையைத் தவிர்த்து என்னை கவர்ந்த சில கவிதைகள்...

அம்மாவின் கரிச் சுவர்

ஒவ்வொறு பொங்கலுக்கும்
வெள்ளையடித்தாலும்
மீண்டும் தன் முகத்தில்
கரி பூசிக்கொள்கிறது
சமையலறைச் சுவர்.

...

அம்மாவுக்காய் அழுகிற
ஈர விறகுகளின்
புகைச் சோகம் தாங்கி
மேலும் கறுக்கும் அது.

...
அக்காவுக்கு இவற்றிலிருந்து 
சீக்கிரம் விடுதலை.

கல்யாணம் ஆனதும்
கேஸ் குக்கர்
சுவரில் டிஸ்டெம்பர்

சுவர் விடுதலை மட்டும் 
பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்து விட்டார்கள்.


இட்லி புத்திரர்கள்

இட்லிகள் கொள்கையற்றவை
சாம்பாரில் மிதவையாகவும்
சட்னியில் துவையலாகவும்
ஏதுமற்ற பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

பெயர் உருவான கதை

ஆரம்பத்தில் அதன் பெயர்
வேறாக இருந்தது.

அதன் பலகீனம்
இருபுறம் சுவர் சூழ்ந்த
குறுபாதை எனலாம்.

...

ஆத்திரம் மட்டுமே
அடக்கக் கற்ற
மனிதர்கள் கூடி
அதற்கொரு பெயர்
அப்புறம் வைத்தனர் 
மூத்திரச் சந்து.

சலூன் கண்ணாடிகள்

பிமபங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்.

நியூட்டனின் மூன்றாம் விதி

மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம் 
அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில்.

...

உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.

எனதருமை மேல்தளத்து நண்பா...
தலையணையையும் மீறி 
உன்காதுகளில்
சுழன்றுகொண்டிருக்கும்
என் மின்விசிறி!

கட்டணக் கழிப்பிட உரிமையாளன்

ஆச்சா... ஆச்சா... குரல் கொடுத்தபடி
மதிய உணவு உண்கிறான்
கட்டணக் கழிப்பிட உரிமையாளன்.

லிஃப்ட் பயம்

வழக்கம்போல இம்முறையும்
லிப்ட்டில் பயணிக்கையில்
அலாரத்தையே பார்க்கிறேன்.

கோயிலில் ஒதுங்கியவர்கள்

பலத்த மழை
வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கோயிலில் ஒதுங்கியவர்கள்.

பல்லக்கு தூக்கிகள்

சாமியின் முகத்தில்
சந்தனக் காப்பு
பல்லக்கு தூக்கிகளின் சாராயநெடி

நிழல்

ஜன்னல் கம்பியை வளைத்தது
திருடனல்ல
நிழல்.

தலையணை வாத்துகள்

வாத்துகள்
ரெக்கைகள் இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை.
பிறந்த வீடு, புகுந்த வீடு என
பெண்களைப்போலவே
தண்ணீருக்கும் தரைக்கும்
அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை!

குழந்தைகளுடன் பேசும் கலை

எல்லோரும் ஒரு காலத்தில் 
குழந்தையாக இருநதாலும்
வளர்ந்த பின்
தொலைந்துவிடுகிறது
குழந்தைகளின் உலகத்தைத்
திறக்கும் சாவி.



Tuesday, 21 November 2023

யுகபாரதியின் "முனியாண்டி விலாஸ்"

"முனியாண்டி விலாஸ்" என கவிதை தொகுப்பிற்கு பெயரிட்டதே இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. இன்று முனியாண்டி விலாஸ் நலிந்து பல கிளைகளை மூடி வந்தாலும், எஞ்சி இருக்கும் கிளைகள் மேற்கத்திய உணவை இங்கே பரப்பி வரும் கேஎஃப்சி-களையும், மெக்டோனால்ட்ஸ்-களையும் எதிர்த்து நிற்கும் தனித்துவம் கொண்டவை. அதே தனித்துவம் இக்கவிதை தொகுப்பில் தென்படுகிறதா?



இத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணவு, உடை, உறவுகள், உணவகம், மழை, கல்வி நிலையங்கள், காதல், காமம், சமூக நிலை, சாதி, அரசியல் ஆகியவை பற்றிய கருத்துகளுடன் கவிஞரின் கருத்தியலையும் தாங்கி நிற்கின்றன. அரசியல் தலைவர்களை பற்றிய விமர்சனங்களுடன் தேர்தல் அரசியல் நகர்வுகளையும், வாக்காளர் மனநிலையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள். அரசியல் சார்ந்த கவிதைகளை தாண்டி உணவு,  காதல் பற்றிய கவிதைகளிலும் அவற்றை சுற்றிய அரசியல் இடம்பெற்று சமகால சமூக சூழலை பிரதிபலிக்கிறது. 

பொது இடங்களில் சாதிய பாகுபாட்டையும், வர்க்க வேறுபாட்டையும் தூக்கிப் பிடிக்கும் நிலையை உணவகங்கள் பற்றிய கவிதை பேசுகிறது. அசைவ உணவின் மணம் பல கவிதைகளில் வீசுகிறது. அடுக்கக வாழ்க்கை பற்றிய கவிதை அடுக்கு மாடி வீடுகளில் வாழும், நிற்க கூட நேரமில்லாமல் ஓடும் மனிதர்களின் அவல நிலையை பேசுகிறது. 

பல கவிதைகள் முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும், ஆங்காங்கே சில கவிதைகள் பொதுவான மனநிலையில் தென்படுகின்றன. 

நம்மைச் சுற்றி நிகழும், நாம் கவனித்த-கவனிக்க மறந்த தருணங்களை நமக்கு நெருக்கமான மொழியில் இப்புத்தகம் வழங்குகிறது.

என்னை கவர்ந்த சில வரிகள் -

அடுக்கக வாழ்க்கை

"மனித வாடையைத் தவிர்க்கலாம் 
தனித்திருக்கலாம் 
அழைப்பு மணிக்கு மட்டும் 
கதவைத் திறந்தால் போதும் 

சொந்தங்கள் வந்தாலும் 
இரண்டொரு நாளில் ஊருக்குக் 
கிளம்பிவிடுவார்கள் 

கோழிச் சண்டையோ 
குழாயடிச் சண்டையோ வராது 

பாதங்கள் தரையில் பாவாத 
கால் நகங்களில் அழுக்கேறாத 
சவத்திற்கு ஒப்பான 
ஒரு வாழ்வை மேற்கொள்ள 

அடுக்கக வாழ்க்கை 
அற்புத வாழ்க்கை"

முனியாண்டி விலாஸ்

"முனியாண்டி விலாஸ் 
ஓர் அசைவ உணவகம். ஆனாலும் 
அங்கே, சைவத்திற்கு இடமில்லாமல் 
போவதில்லை 

முனியாண்டி விலாஸ் 
எளிய மனிதர்களின் கூடாரம் 
பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்களை 
அங்கே பார்க்க முடியாது 

நெடிய காத்திருப்பிற்குப் பின்தான் 
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை 
முனியாண்டி விலாஸ் செய்வதில்லை 

அங்கே, ஆங்கில மெனுக்கார்டு கிடையாது 
ஆர்டர் எடுத்துக்கொள்ளபவர்,நம்மிலும் 
வறிய வாழ்வை மேற்கொள்பவராயிருப்பார் 

மேசைத்துடைப்பவர் மேலாளர் என்னும் 
பாகுபாடுகள் அங்கே இல்லை 
எல்லாரும் எல்லா வேலைகளையும் 
இழுத்துப்போட்டு செய்வர் 

அங்கே, 
சீர்காழியும் சிதம்பரம் ஜெயராமனும் 
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்கள் மெருகேற்றிக்கொள்வர் 

கொல்வது பாவிமாயிற்றே என்று 
அங்கே யாரும் குமைவதில்லை

...

முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு 
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ அலையாது 

இறக்குமதி செய்யப்பட்ட 
சமையற்குறிப்புகளை அங்கே உள்ள மாஸ்டர்கள் பழகிக்கொள்ள விரும்புவதில்லை

...

முனியாண்டி விலாஸ் 
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும் முனியாண்டியாகவே பார்க்கிறது 

கணினிக்கும்  டிஸ்யூ பேப்பருக்கும் 
மயங்காத முனியாண்டி விலாஸ் தன் 
அசலான முகத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்வதில்லை 

முனியாண்டிகளுக்காக 
முனியாண்டிகளால் நடந்தப்படும் 
முனியாண்டி விலாஸ் 
ஒரு சமூகத்தின் செயல்பாடு 
ஒரு சமூகத்தின் அடைபாளம் 
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர் 

முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அங்கே வருவதில்லை முனியாண்டிகளை உணராதவர்களும் 
அங்கே வருவதில்லை"


உணவகம்

"அசைவ உணவகத்தில் 
எக்ஸ்ட்ரா வாங்காதவன் 
தலித்தாக நடத்தப்படுவான் 

மெல்லிய போதையோடு 
வருகிறவர்களுக்கு 
ராஜமரியாதை 

ஒரே ஒரு ஆம்லெட் என்றதும் 
முகம் சுருங்கி 
யாருக்கோ வைப்பதுபோல 
வைத்துவிட்டுப் போகிறவனுக்குத் 
தெரியாது 

நான் வேறொரு உணவகத்தில் 
கோப்பை கழுவுபவனென்று."


வேதாள தேவதை

"அதிகாரம் கைக்குவந்த பிறகு 
ஒவ்வொரு 
தேவதையும் வேதாளமாகிவிடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள் 

அவர்களால் 
நம்பவே முடியாத இன்னொன்று : 
தம்மால் வென்ற வேதாளம் 
தம்மை வீழ்த்துவதற்கு தேவதையாக 
வேடமிட்ட விஷயம்தான்."

ஒரு சின்ன கற்பனை

"கடவுள் என்று சொல்லப்படுபவர் 
நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தால் 
எப்படி இருக்கும்? 

இரவல் வாங்கலாம் 
தேவையெனில் கடன் கேட்கலாம் 
எங்கே காணோமே எனலாம் 
வீட்டில் விருந்தாளியா எனச் சிரிக்கலாம் 
இன்று விடுமுறையா 
உங்கள் லைனிலாவது கரண்ட் இருக்கிறதா 
பேப்பர் பார்த்தீர்களா என 
எதையாவது கேட்டுக்கொண்டே 
இருக்கலாம் 

பக்கத்தில் இருக்க வேண்டிய ஒருவர் 
உள்ளே இருந்து  ஒரு பிரயோசனமும் 
இல்லை." 

Friday, 8 January 2016

தமிழ்


பன்மொழிகள் இவ்வுலகில் தோன்றி மறைந்தும்,
தொண்மொழி எங்கள் தமிழும் பாரும்!
தென்பரத நாட்டில் முடங்கிய போதும்,
வான்புகழ் கொண்ட செம்மொழி ஆகும்!

ஆயிரம் மழைத்துளி கடலில் சேரும்,
அதிலொரு துளி மட்டும் முத்தாய் மாறும்,
ஆயிரம் கவிகள் இப்புவியில் பிறந்தும்,
இருவரியில் புவி தந்தக் கவியும் பாரும்!

இசையும் மொழியே என்பார் பலரும்,
தமிழும் இசையே என்பேன் நானும்!
தமிழ் மெல்லச் செத்தது போதும்,
மறுபிறவி கொண்டு செழித்திட காண்போம்!

எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்

Sunday, 27 December 2015

கல்வி தந்த தாயே!

சூழல் : கல்வி தந்தப் பெண்மணியின் சிலையைப் பார்த்து, கல்வி முடித்துச் செல்லும் மாணவனின் கவிதை.
வஞ்சம் கொண்ட நெஞ்சம் பல,
லஞ்சம் கேட்டு மிஞ்சுவதுண்டு.
நஞ்சு விளைந்த அந்த நெஞ்சங்களை,
பிஞ்சு நெஞ்சங்கள் கெஞ்சுவதுண்டு.
தஞ்சம் தரும் நெஞ்சம் கொண்ட
நெஞ்சங்களுக்குப் பஞ்சம் உண்டு.
அதில் மிஞ்சும் பேரும் கொஞ்சம் உண்டு,
புரிந்துக் கொண்டேன் உன்னைக் கண்டு!

தஞ்சைக்குக் கொள்ளிடம் போல,
காஞ்சிக்குப் பாலாறு போல,
என் வாழ்விற்கு வளம் சேர்த்தாயே,
கல்வி தந்த என் இரண்டாம் தாயே!

கலைக் கற்று செல்கிறேன் இன்று,
சிலையாய் நீயும் வாழ்த்துகிறாய் நின்று!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்
Note : Situational Poetry

கடவுள் யார்?


சிலையும் சிலுவையும் பரம்பொருள் என்றும்,
கதையின் நாயகன் கடவுள் என்றும்,
காவி துறவி சாமி என்றும்,
மதத்திற்காக கலவரம் என்றும்,
தன்னைத் தானே தேவன் என்றும்,
கூவும் மாந்தர் மெய்யும் கேளும்!

மண் செழிக்க மழைத்துளி தரும்,
வான் என்னும் பகவான் பாரும்.
தேனி வாழ தேனைத் தரும்,
ஒரு நாள் தெய்வம் பூவும் பாரும்.
மரம் வளர உரமாய் மாறும்,
நரகல் கூடக் கடவுள் பாரும்!

சேய்க்காக பத்து மாதம் வாடும்,
தாய் என்னும் தெய்வம் பாரும்.
மெய்க் காக்க அன்னம் தரும்,
விவசாயி என்னும் சாமி பாரும்.
நோய் அண்டா அண்டம் தரும்,
ஆய் அள்ளும் ஆண்டவன் பாரும்!

தேவன் என்பவன் ஒருவன் அல்ல...
ஒவ்வொருவனும் தான்!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்.

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...