Saturday, 31 January 2026

கவிஞர் மு.மேத்தாவின் "ஆகாயத்துக்கு அடுத்த வீடு"

கவிஞர் மு.மேத்தாவை நான் அறிந்தது திரைப்பாடல்கள் மூலமே. ரெட்டை வால் குருவி திரைப்படத்தில் வரும் "ராஜ ராஜ சோழன் நான்" பாடலும், காசி திரைப்படத்தில் வரும் "என் மன வானில்" பாடலும் தான் மு.மேத்தாவை எனக்கு அறிமுகப்படுத்தின. 

"""கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே"""

“""இறைவனிடம் வரங்கள் கேட்டேன்…
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்…
மனிதரில் இதை யாரும் அறிவாரோ…

நான் பாடும் பாடல் எல்லாம்…
நான் பட்டபாடே அன்றோ…
பூமியில் இதை யாரும் உணர்வாரோ…

மனதிலே மாளிகை வாசம்…
கிடைத்ததோ மர நிழல் நேசம்…
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…

ராகம் உண்டு தாளம் உண்டு…
என்னை நானே தட்டிக்கொள்வேன்…
என் நெஞ்சில் உண்மையுண்டு…
வேறென்ன வேண்டும்…”""

- போன்ற வரிகளில் ஈர்க்கப்பட்ட நான், மு.மேத்தாவின் கவிதைகளை வாசிக்க எத்தனித்தேன். "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" கவிதைத் தொகுப்பை புத்தகக் கண்காட்சியில் தேர்ந்தெடுத்தேன். 


இந்த கவிதைத் தொகுப்பில் காதல், இயற்கை, மனித இயல்பு ஆகியவற்றைப் பற்றிய கவிதைகளிருந்தும், அரசியல் நையாண்டியும், சமூக அவலநிலை பற்றிய கோபமும் பல கவிதைகளில் பிரதானமாக தென்படுகின்றன. சமகால அரசியல் நிகழ்வுகளையும் கவிதைகள் மூலம் பதிவு செய்கிறார் மு. மேத்தா. இன்றைய சூழலுக்கும் அக்கவிதைகள் பொருந்திப் போகின்றன. பழகிப்போன கற்பனைகள் ஆங்காங்கே இருந்தாலும் மக்களுக்கு நெருக்கமான மொழியில், வாசகர்களைத் திணரடிக்காமல் எளிய சொற்களை கையாள்கிறார் கவிஞர்.



என்னை கவர்ந்த சில வரிகள் -

***இந்தியா என் காதலி***

....
உன் மைய மண்டபத்தில்
குயில்களின் குரலை
அவைக் குறிப்பிலிருந்து
நீக்க வேண்டுமென்று
காக்கைகள்
கலகம் செய்கின்றன.
....
இராம ஓவியம் 
தீட்டுவதற்கு 
இரத்தம் போதவில்லை
என்று
சத்தம் போடுகின்றன
தூரிகைகள்...

நீயோ 
"தூரிகை வாழ்க" என்று
பேரிகை கொட்டுகிறாய்!
....
எந்த நேரத்தில் 
இடிப்பார்களோ
எந்த நேரத்தில் 
வெடிப்பார்களோ
என்று
ஊர் ஊராகக்
கடவுள்
ஒளிந்து வாழ்கிறான்...

அன்னிய முதலாளிகளின் 
கோப்பைகளை எமது
குருதியால் நிரப்பிவிட்டு
அவர்களது
குளிர்பானங்களால்
எம்மைக்
குளிரவைக்கப் பார்க்கிறாய்...

ராமராஜ்யக்
கனவுகள்
மெல்ல மெல்ல
ரோம ராஜ்யக்
கனவுகளாய் 
மாறிவருகின்றன...


***எழுத்தெனப் படுவது***
அதை நான் 
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்...
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்!

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத் தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்...



***விளக்குகளின் விழா***
...
ஒற்றை விழிச்சுடரால்
விளக்கு
உற்றுப் பார்க்கிறது...
இருட்டு எங்கேனும் 
ஒளிந்துள்ளதா
என்று.

திடீரென்று
சோகம் விளக்கைச்
சூழ்ந்து கொள்கிறது.

நிழலாய் உடன் நிற்கும்
சொந்த இருட்டினைத்
துரத்த முடியவில்லையே...


***ஓர் உரையாடல்***
(2002-2003 காவிரி பிரச்சினை)

“செப்புத் தகட்டில்
எழுதுவதா?
கல்லில் 
செதுக்குவதா?
எதில் எழுதிவைத்தால் 
நிலைக்கும் 
இந்திய ஒருமைப்பாடு?"
என்றார்.

தயங்காமல் சொன்னேன்
"தண்ணீரில் எழுதுங்கள்"
என்று.

"நீர்மேல் எழுத்து 
நிலைக்காதே" என்றார்.

"நீரில் எழுதாவிட்டால் 
இந்திய ஒருமைப்பாடு 
நிலைக்காதே" என்றேன்.

"எந்த நீரில் 
எழுதச் சொல்வது?" என்றார்.

"கிருஷ்ணாவைக் கூப்பிட்டுக்
காவிரியில்
எழுதச் சொல்லுங்கள்"
என்றேன்.

No comments:

Post a Comment

“From Raaja with Love” – A Breeze Through Chennai’s Scorching Heat

As a long-time admirer of his music, attending one of his live concerts had been on my bucket list since my college days. After years of wai...