Tuesday, 11 July 2023

அசோகமித்திரனின் "மானசரோவர்"

அசோகமித்திரனின் "மானசரோவர்" எனும் நாவல் கோபால், சத்யன் குமார் என இரு வேறு மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு பயணிக்கிறது. அவர்கள் இருவரின் மொழி வேறு, மதம் வேறு, பொருளாதார நிலை வேறு, அவர்கள் வாழும் நிலப்பரப்பு வேறு, குடும்ப சூழல் வேறு - அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை சினிமா துறையில் வேலை என்பதே. தொழில் ரீதியாக அறிமுகமாகும் இவர்கள் நண்பர்களாகின்றனர். அதன் பின்னர் அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்விலும், தொழில்முறை வாழ்விலும் இந்த நட்பின் தாக்கம் தொடர்கிறது. 



இவ்விறு கதாப்பாத்திரங்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றிலிருந்து மீளவும், தீர்வு காணவும் அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளும், எடுக்கும் முடிவுகளும் மனித இயல்பின் எல்லைக்குட்பட்டதாக இக்கதையில் அமைகின்றன. வாழ்வில் எதிர்படும் விளங்க முடியாத புதிர்களுக்கு விடைகளை பகுத்தறிவால் அடைய முற்பட்டு இயலாமல், கடைசியாக ஆன்மீகத்தால் அடைய விரும்பும் பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பாக இவ்விறு கதாப்பாத்திரங்கள் அமைகின்றன. கதையின் இறுதியில் கோபால், சத்யன் குமார் இடையே நடக்கும் உரையாடலில் அவர்களின் தேடல் முடிவடைகிறது. 

கதையில் வரும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதன் விளைவாக இசுலாமிய மக்களின் நிலையும் மேம்போக்காக சொல்லப்பட்டாலும், குடும்பத்தைப் பிரிந்த ஒரு முஸ்லீமின் உளவியல் பாதிப்புகள் நுட்பமாக விவரிக்க படுகின்றன. சினிமா தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிச்சயமற்ற வாழ்வும் இக்கதையில் பேசப்படுகிறது. 

ஆங்காங்கே சிறிது செயற்கை தன்மை தென்பட்டாலும், அசோகமித்திரனின் கதை சொல்லும் விதம் இந்நாவலை உயிர்ப்புடன் நகர்த்தி செல்கிறது. 

No comments:

Post a Comment

Harlan Coben’s “Fool Me Once”

Harlan Coben’s “Fool Me Once” revolves around Maya Stern, a military veteran whose career comes to an abrupt end after she blows up an SUV c...