Showing posts with label Honour Killings. Show all posts
Showing posts with label Honour Killings. Show all posts

Monday, 26 February 2024

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்


தமிழ் சமூகத்தில் மக்கள் வழிபடும் கொலையுண்டு தெய்வமாக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் தோற்றம், பின்புலக் கதை, வழிபாட்டு முறை ஆகியவற்றை ஆய்வின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நூல் "ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்". 


சாதி மீறிய காதல் தொடர்பான கொலைகள் தினசரி நிகழும் அவல நிலையை காண்கிறோம். இவை சாதிய ஆணவக் கொலைகள் என வழங்கப்படுகின்றன. ஆணவக் கொலைகளுக்கு பின்னால் சாதியைத் தவிர குடும்ப பெருமிதமும் காரணமாய் அமைகிறது. அப்படி தென் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சில கொலைகளையும், கொலையில் பலியானவர்களை தெய்வமாய் வழிபடும் மரபையும் விவரிக்கிறது இந்த ஆய்வு. 

சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு ஆகியவை எவ்வாறு மனித உயிரை பறிக்கும் எல்லை வரை கொண்டு செல்கின்றன என்பதை இந்த கதைகளில் காண்கிறோம். குடும்ப மானம் என்பதை பெண்ணைச் சுற்றியே நிறுவி, கற்பு என்பதை பெண்ணோடு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிற்பந்த கற்பு முறையால் நிகழ்ந்த கொலைகள் ஏராளம். கணவனை பிரிந்து வாழும் மனைவி மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கில் ஈடுபடக்கூடாது எனும் மரபை மீறியதாக கூறி ஒரு பெண் கொல்லப்பட்டதை மாடாத்தி அம்மன் கதை விவரிக்கிறது. 

கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் கொலைகளில் முடிகின்றன. ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒருவன் தனது ஆற்றலால் இடைநிலை சாதியில் இருப்பவனை விட உயர்ந்துவிட்டான் என்பதற்காக நிகழ்ந்த கொலையும் இந்நூலில் இடம்பெறுகிறது. அதே சமயம் சாதிய படிநிலை ஒரே சாதிக்குள்ளும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் என்பதற்கு சான்றான கொலையும் இந்நூலில் இடம்பெறுகிறது.

ஆ. சிவசுப்பிரமணியன்

இந்த தெய்வங்களின் கதைகளை குறிப்பிடும் போது தடை அல்லது மரபு, தடை அல்லது மரபு மீறல், விளைவு, பழிவாங்கல், முடிவு ஆகியவை கொலையுண்டவர் தெய்வமாக மாறுவதற்கான கூறுகளாக சுட்டிக் காட்டுகிறார் சிவசுப்பிரமணியன். சாதிய வண்மமும், குடும்ப மானமும், பொருளாதார மேல்நிலையும், நேரடி சண்டைகளும் மூர்க்கமான வன்முறையை தூண்டும் காரணிகளாக அமைகின்றன. நாம் பேரூந்துகளில் பயணிக்கும் போது கிராமப்புரங்களிலும், ஊர் எல்லையிலும், தூரத்து காடுகளிலும் காணும் முறையான பராமரிப்பு இல்லாத சின்னச் சின்ன கோவில்களுக்கு பின்னாலும் இம்மாதிரியான வன்முறை சம்பவங்கள் இருக்கக்கூடும்.

Thursday, 25 May 2023

பெருமாள் முருகனின் "பூக்குழி"

பெருமாள் முருகனின் "பூக்குழி" சாதியை மீறி காதலித்து இரகசிய திருமணம் செய்த குமரேசன்-சரோஜா ஆகிய இருவரை பிரதான கதாப்பாத்திரங்களாக கொண்டு பயணிக்கிறது. நகரத்தில் வாழும் சரோஜாவும், பிழைப்புக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் குமரேசனும் காதல் வயப்படுகிறார்கள். சரோஜா தோல் ஷாப்பில் வேலைக்கு செல்லும் தனது அண்ணனையும், தந்தையையும் விட்டு குமரேசனுடன் செல்ல தீர்மானிக்கிறாள். ஒரு இரவில் வீட்டைவிட்டு இரகசியமாக வெளியேறி குமரேசனுடன் ஊரைவிட்டு புறப்படுகிறாள். "எதுவானாலும் நா சொன்னா அம்மா கேட்டுக்கும்..." என்ற குமரேசனின் வார்த்தையை நம்பி இருவரும் அவனது கிராமத்துக்கு வந்து இறங்குகின்றனர். இதுவரையில் வழக்கமான காதல் கதையாக விரியும் நாவல் கிராம மக்களும், உறவினர்களும் இவர்கள் காதலுக்குக் காட்டும் எதிர்வினையைக் கையிலெடுக்கும் போது சற்றே வேறுபடுகிறது.




குமரேசன் தனது அம்மாவிடம் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது அவளது நடவடிக்கைகள். அழுகையும் புலம்பலுமாய் அவனையும் சரோஜாவையும் ஒதுக்குகிறாள். சரோஜாவை வசவுகளால் காயப்படுத்தாத நாளில்லை. உறவினர்களும் தங்கள் கவுரவத்தையே தூக்கிப்பிடித்துக் கொண்டு குமரேசனை விரட்டுகிறார்கள். கிராம மக்கள் சரோஜா என்ன இனமென அறியவே முற்படுகின்றனர். கீழ் சாதி பெண் என அறிந்தால் வரும் பிரச்சினைகளை நினைத்து குமரேசன்அந்த கேள்வியை சமாளித்து காலம் கடத்துகிறான். இவ்வாறான சூழ்நிலையில் சரோஜா அனுபவிக்கும் சித்திரவதையையும், தனிமையையும் பெருமாள் முருகனின் எழுத்து எளிய மொழிநடையில் அழுத்தமாக பேசுகிறது. 

குமரேசனின் அம்மா குமரேசனின் காதலை ஏற்றுக்கொள்ளாததற்கு வலுவான காரணம் சொல்லப்படும் அதே நேரத்தில் சரோஜாவை தன் கிராமத்திற்கு அழைத்து வரும் குமரேசனின் எண்ணத்திற்கு வலுவான காரணம் ஏதும் இல்லை. காய் விற்கும் பாட்டிக்கும் சரோஜாவிற்கும் நடக்கும் உரையாடலில் கலப்பு திருமணங்களுக்கு அந்த கிராம மக்கள் காட்டும் எதிர்வினையின் எல்லை குறிப்பிடப்படுகிறது. அதன்படி பார்த்தால் கொடூரமான சம்பவங்கள் ஏற்கனவே அக்கிராமத்தில் நடந்திருக்கக்கூடும். ஆனாலும் குமரேசன் தன் காதல் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பது அவன் அறியாமையா? தாயின் ஒப்புதலை பெற்று அவளுடன் வாழ நினைக்கும் சுயநலமா? இல்லை, சமாளித்து விடலாம் எனும் அர்த்தமற்ற துணிச்சலா? 

நகரத்தைக் காட்டிலும் கிராமத்தில் சாதிய கட்டமைப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதையும், அதன் விளைவாய் கிராம மக்கள் எந்த எல்லை வரை செல்ல எத்தனிக்கிறார்கள் என்பதையும் உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது இந்நாவல். கிராமிய அமைப்பும், கிராம மக்களும் ஏன் குமரேசனின் அம்மாவும் கூட எடுக்கும் முடிவுகள் சாதிய படிநிலையை இன்றும் நிறுவிச் செல்லும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. வெளிப்படையாக சாதிகள் குறிப்பிடபடாவிட்டாலும், நாவலில் வரும் குறியீடுகள் உணர்த்திவிடுகின்றன. 

நாவலில் வரும் காதல் காட்சிகள் செயற்கை தன்மை துளியும் இல்லாது அமைகின்றன. நாவலுக்கு non-linear narrative கூடுதல் பலம். இறுதி காட்சி open ended ஆக, அதே சமயம் பூக்குழியைப் போல் அமைவது நிறைவான முடிவு. 

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...