Sunday, 20 August 2023

கபிலன் வைரமுத்துவின் "ஆகோள்"

கபிலன் வைரமுத்துவின் "ஆகோள்" அறிவியல் புனைவாக அமையும் ஒரு த்ரில்லர் நாவல். சங்க காலத்தில் சிற்றரசுகளினிடையே நிகழும் போர்களில் "ஆநிரை கவர்தல்" என்பது எதிராளியின் வளங்களாகிய ஆடு - மாடுகளை கவர்ந்து வரும் செயலைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த செயல் ஒரு தரப்பினருக்கு வீரச்செயலாகவும், மறு தரப்பினருக்கு களவாகவும் தோன்றும். 


"ஆகோள்" எனும் பதமும் எதிரிகளின் வளங்களை கவர்ந்து அவர்களை வலுவிழக்க செய்வதையே குறிக்கிறது என்கிறார் எழுத்தாளர். இனிவரும் காலங்களில் “data” தான் உலகில் மிகப்பெரிய வளமாக கொள்ளப்படும். தனிப்பட்ட தகவல்களையும், தரவுகளையும் கவரும் நோக்கத்தில் தொழில்நுட்ப பெருநிறுவனங்களும், அதற்கு ஆதரவு அளிக்கும் நிலையில் உள்ள உயரதிகாரமும் இச்சமூகம் எதிர்கொள்ள வேண்டிய அபாயம்.

இந்நாவலின் கதையில் இந்திய அரசு கொண்டு வருவதாக "அடையாள்" எனும் ஒற்றை அடையாள ஆவணத்திற்கு தேவையான தனிநபர் அடையாளங்களான கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை சேமிக்கும் நிறுவனத்தில் நடக்கும் விதிமீறல்கள் இடம்பெறுகின்றன. இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் "identity theft" மற்றும் "invasion of privacy" ஆகியவற்றை சுதந்திரத்திற்கு முன் கொண்டுவரப்பட்ட கைரேகை சட்டத்துடன் பொருத்தி இக்கதை ஒரு புனைவாய் அமைகிறது. அதே சமயம் கைரேகை சட்டத்தை பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றியும், பாதிக்கப்பட்ட சாதிகளின் போராட்டத்தை பற்றியும், அழுத்தமாக பதிவு செய்கிறது இந்நாவல். 

சமகால அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் கட்சிகளின் நகர்வுகளையும், மககளின் மனநிலையையும் நாவல் நெடுக நக்கல் நையாண்டியுடன் வரும் வசனங்கள் விமர்சிக்கின்றன. 

நவீன விஞ்ஞான உலகின் “next-gen” தொழில்நுட்பங்களோடு ஒரு விறுவிறுப்பான "sci-fi” thriller ஆக அமைகிறது "ஆகோள்".

No comments:

Post a Comment

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...